Wednesday, June 19, 2013

யார் முட்டாள்

சில நாட்கள் முன்பு வலைப்பதிவு ஒன்றில் படித்தது.

ஒருவர் நடந்து சென்ற பாதையில் ஏதோ ஒன்று பளபளப்பாக தெரிய, அதை எடுத்துப் பார்த்தார். அவருக்கு அது என்ன என்று தெரியவில்லை. ஆனால், அவர் அருகில் இருந்தவர், அதை வைரம் என்று உடனே கண்டு பிடித்து விட்டார். அதனால், அதை வைரம் என்று சொல்லாமல், வியாபாரம் பேச ஆரம்பித்தார்.

நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன், எனக்கு இந்த கல்லை கொடுத்து விடு என்றார். முதலாமவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு கல். அதற்கு ஏன் இவர் காசு தருகிறார் என்று யோசித்து விட்டு, சரி விலையை ஏற்றி பார்ப்போம் என்று கருதி, எனக்கு 200 ரூபாய் கொடு என்றார். இரண்டாமவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. 100 ரூபாயே இதற்கு அதிகம் என்று பேரம் பேசினார்.

இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பொற்கொல்லர், எனக்கு அந்த கல்லை கொடு. நான் உனக்கு 2000 ரூபாய் தருகிறேன் என்றார். முதல் ஆளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அந்த பணம் அப்போது அதிகமாக தெரிந்ததால், அவர் ஒத்துக் கொண்டார், வைரமும் கை மாறியது.

இப்போது அந்த இரண்டாமவர், முட்டாள், உன் கையில் இருந்தது சாதாரண கல் இல்லை. அது ஒரு வைரக்கல். அதன் மதிப்பு தெரியாமல், வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டாயே, முட்டாள், முட்டாள், என்று கடிந்து கொண்டார்.

அதற்கு சிரித்த படி முதலாமவ‌ர் சொன்னார், எனக்கு அது வைரம் என்றோ, அதன் மதிப்போ, எதுவுமே தெரியாது. ஆனால், அது அத்தனையும் தெரிந்தும் ஒரு நூறு ரூபாய்க்கு கஞ்சத்தனம் பட்டு இழந்து விட்டாயே, நீதான் மிகப் பெரிய முட்டாள்.

ஹும்..! இன்று பணியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று மனதை சிறிது பாதித்தது.
யோசிக்க வைத்தது, அதன் விளைவாக சட்டென்று பதிந்து விட்டேன்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும்,

என்றும் அன்புடன்,
கா. பிரைட்

0 Comments:

Post a Comment

<< Home